Tuesday, October 13, 2015

திருவரங்க மாளிகையார், நம்பெருமாள்

இன்று (12.10.2015) மாலை நம்பெருமாளை சேவிக்க சென்று சுமார் ஒன்னரை மணி நேரம் கையங்க்ரியம் செய்தேன் .. வருகின்ற சேவார்திகளை நகருங்க என்று வரிசை படுத்தும் வேலை !! அரங்கன் முன் நின்று இந்த பணி செய்வது என்றுமே மனதிற்கு இனியதே !!

நம்பெருமாள் மூலஸ்தானம் சம்ப்ரோக்ஷனைக்காக பாலாலயம் ஆகி இருக்கிற படியால் ..தற்போது யாக சாலையில் இருக்கிறார்!!

நம்பெருமாள் உபயநாச்சிமார்கள் ..மற்றும் மிக மிக முக்கியமாக “திருவரங்க மாளிகையார்” என்கிற இன்னொரு உத்சவருடன் சேவை சாதிக்கிறார் !!

மூலஸ்தானத்தில் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர இருப்பினும் நிச்சியமாக எவராலும் .. வெளிச்சக் குறைவு ..மேலும் முழுமையாக சேவை ஆகாது !!

திருவரங்க மாளிகையார் என்கிற இந்த மூர்த்தி மூலஸ்தானத்தில் பெரிய பெருமாள் திருவடி அருகில் வலது ஓரத்தில் இருப்பார் ..

இந்த படத்தை நிச்சியமாக எனது (self imposed restrictions )சுய கட்டுப்பாட்டையும் மீறியே எடுத்து பதிவிடுகிறேன் .. காரணம் .இனிமேல் இந்த மாறி சேவை நம் காலத்தில் காண இன்னும் பல பல ஆண்டுகள் ஆகும் (திரும்பவும் இவ்வளவு பெரிய சம்ப்ரோக்ஷனை நடக்கும்போது மட்டும் )

திருவரங்க மாளிகையார் என்கிற இந்த உத்சவ மூர்த்தி (ஸ்ரீரங்கத்தில் இரண்டு ரெங்கநாதர் விக்ரகங்கள் உண்டு) 1311 மற்றும் 1322 காலகட்டங்களில் ஏற்பட்ட துலுக்கர் படை எடுப்பிற்கு பிறகு அரங்கநாதர் உற்சவர் திருமேனி பல ஆண்டுகள் திருவரங்கத்தை விட்டு வெளியேறி இருந்த போது செய்து வைக்கப்பட்டது !!

கோவில் ஒழுகுவில் துலுக்கன் கலாபகத்துக்கு பிறகு அழகியமணவாள பெருமாள் (உத்சவ மூர்த்தி ) எங்கு தேடியும் கிடைக்கததால்..

“கல் திரை நீக்கி தன்னுடைச் சோதிக் கேழுந்தருளினதாக திருவரங்கமாளிகையாரை தத் ஸ்தானத்தில் பிரதிஷ்டிபித்து “... பூர்வப்ரகாரம் போல சகல உத்சவங்களும் பெருமாளுக்கு நடபித்துக்கொண்டு போந்தார்கள் “ என்று சொல்லப்பட்டு இருக்கிறது .

சுமார் 50 ஆண்டுகள் அரங்கனாக வழிபட பட்டு வந்த “திருவரங்க மாளிகையார்” உத்சவ திருமேனி தற்போது யாக சாலையில் எல்லாரும் காணும் வண்ணம் நம்பெருமாள் உபய நாச்சிமார் உடன் காட்சி அரிய அளிக்கும் காட்சி !!!

விஜயராகவன் கிருஷ்ணன்


0 comments:

Post a Comment